Featured post

The Eleventh Rudra Incarnation of Merciful Lord Siva

Thursday, 4 February 2016

ஸ்ரீமத் இராமாயணம் ஸுந்தர காண்டம்



ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீபக்த வரப்ரஸாத ஆஞ்சநேயர் சுவாமியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
ஸ்ரீபக்த வரப்ரஸாத ஆஞ்சநேய சுவாமி, சேலம். 
 
ஸ்ரீமத் இராமாயணம்
ஸுந்தர காண்டம்

எழுதியவர் : திரு. R. நாகராஜன்
 
இதை தினமும் படிப்பவர்களுக்கு கஷ்டங்கள் சடுதியில் மறையும், வெற்றிகள் விரைவில் ஓடிவரும்


ஸுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
சுகம்தரும் சொர்க்கம் என்று கருத்தில் கொள்வார்!
கண்டேன் சீதையை என்று காகுத்தனிடம் சொன்ன
கருணை மிகு ராமபக்தன் ஆஞ்சநேயர் பெருமை இது!

அஞ்சனை மைந்தன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றார், ராம பாணம் போலவே!
ராக்ஷஸர் மனை நோக்கி ராஜ கம்பீரத்தோடு
ராம தூதனும் விரைந்தே சென்றார்!

அங்கதனும் ஜாம்பவானும் அனைத்து வானரர்களும்
அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் வருணாதி தேவர்கள்
வழியெல்லாம் நின்று பூமாரி பொழிந்தனரே!

மைனாக பர்வதம் மாருதியை உபசரித்து
மாருதியும் மைநாகத்தை திருப்தி செய்து
ஸிரஸியை வெற்றி கொண்டு, ஸிம்ஹிகையை வதம் செய்து
சந்தோஷமாய் சமுத்திரத்தைத் தாண்டியே இலங்கை சேர்ந்தார்!

இடுக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை,
இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கவர்கிறான்!
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை,
அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான்!

சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்,
சீதாப் பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினார்,
ராவணன் வெகுண்டிட ராக்ஷஸியர் கலங்கிட,
வைதேஹி அரண்டிட வந்தான் துயர் துடைக்க!

கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி,
சூடாமணியைப் பெற்ற சுந்தர ஆஞ்சநேயர்,
அன்னையின் கண்ணீர் கண்டு, அரக்கன்மேல் கோபம் கொண்டு,
அசோகவனம் அழித்து, அங்கிருந்தவரை ஒழித்தான்!

பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர்,
பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்.
வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்!

அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்,
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்.
ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயர் தாவி வந்தார்,
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய்மறந்தார்!

ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த இராமனிடம்,
கைகூப்பிக் கண்டேன் சீதையை என்றார்!
வைதேஹி வாய்மொழியை அடையாளமாய் சொல்லிய
சொல்லின் செல்வர், இராமனிடம் சூடாமணியை அளித்தார்!

மனம் கனிந்து மாருதியை மார்போடணைத்த இராமர்,
மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானார்!
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டிப் படைகள் சூழ,
அனுமானும், இலக்குவனும் உடன்வரப் புறப்பட்டார்!

அழித்திட்டான் இராவணனை, ஒழித்திட்டான் அதர்மத்தை,
அன்னை சீதாதேவியை சிறைமீட்டு அடைந்திட்டான்!
அயோத்தி சென்று இராமர் ஜெகம் புகழ ஆட்சி செய்தார்,
அவனைச் சரணடைந்தோர்க்கு அவனருள் என்றும் உண்டு!

எங்கெங்கு ரகுராமர் கீர்த்தனமோ, அங்கெல்லாம்
கரம் குவித்து, மனம் உருகி, நீர் சொரிந்து, ஆனந்தத்தில் மூழ்கி,
கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீஆஞ்சநேயா உன்னைப்
பணிகின்றோம் !! பன்முறை உன்னைப் பணிகின்றோம் !!

ஸ்ரீராமருக்கு வெற்றி ! ஸ்ரீஅனுமருக்கு வெற்றி !!




No comments:

Post a Comment