Featured post

The Eleventh Rudra Incarnation of Merciful Lord Siva

Thursday, 4 February 2016

ஸ்ரீமத் இராமாயணம்



ஸ்ரீராம ஜெயம் 


ஸ்ரீபக்த வரப்ரஸாத ஆஞ்சநேயர் சுவாமியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
ஸ்ரீபக்த வரப்ரஸாத ஆஞ்சநேய சுவாமி, சேலம்.

ஸ்ரீமத் இராமாயணம்

எழுதியவர் : திரு. R. நாகராஜன் (அனுமன் மூலமாக)

 
தசரதன் மைந்தனாம் இராம சுவாமி,
கோசலை பெற்ற காவியத் தலைவன்!
சீதையை மணந்த சுந்தர புருஷன்,
உலகம் போற்றும் உன்னதத் தலைவன்!

வசிஸ்டர் வளர்த்த பால குமாரன்,
விஸ்வாமித்திரர் வியந்த வில்லாளி!
வில்லை உடைத்த வீராதி வீரன்,
சொன்ன சொல்லைக் காத்திட்ட தனையன்!

தந்தை சொல்லே மந்திரம் என்றான்,
தந்திரம் கொண்ட தாயை மதித்தான்,
மரவுரி தரித்தான், கானகம் சென்றான்
குகனைக் கண்டான், குளிர்ந்தே நின்றான்!

தாடகை வந்தாள், தடுத்தே நின்றாள்,
மானைக் கண்டாள், மாரீசன் மாண்டான்,
அரக்கன் வந்தான், அள்ளிச் சென்றான்
அழுதே நின்றனர் இராம லஷ்மணர்!

கானகம் எங்கும் கலங்கிக் கலங்கி
வேதனைப்பட்டு விழிகள் சிவந்தனர்,
பறவை அரசன் ஜடாயு வந்தான்
விஷயம் சொன்னான், உயிரும் விட்டான்!

கிஷ்கிந்தை தனிலே அனுமனைக் கண்டான்
வாலியைக் கொன்று வாழ்வு தந்தான்,
சுக்ரீவன் துணையுடன் தேவியைத் தேடினான்,
திக்கெங்கும் தேடி, தேடி அலைந்தான்!

ரிஷபன், நீலன், அங்கதன், ஜாம்பவான்
அனுமனின் தலைமையில் அலைந்தே திரிந்தனரே,
கடலைத் தாண்டிய வீர மாருதி,
சோக வனத்தில், சோகமாய் நின்றான்!

நீதியை உணர்ந்தே தூதனாய் நின்றான்,
இராமனின் தூதன் நானடா என்றான்!
வாலை எரித்த அரக்கனின் இலங்கையைத்
தீயில் இட்டு எரிய விட்டான்!

திரும்ப வந்தான், சிரித்தே நின்றான்,
இராம ஜெயம் என்று ஒன்று சொன்னான்,
சூடாமணியைக் கண்ட இராமர்,
கண்கள் கலங்கித் துயர முற்றார்!

சேதுவைக்கட்டித் தீவினை அடைந்தார்,
வியூகம் அமைத்தே வில்லை எடுத்தார்!
இந்திரஜித்தன், கும்பகர்ணன்
குப்புற விழவே இராவணன் வந்தான்!

அவதாரப் புருஷன் சினத்தின் உச்சியில்,
இலங்கேஸ்வரனை மாய்த்தே தள்ளினார்!
அன்னை வந்தாள், அண்ணலைப் பார்த்தாள்,
கண்ணீர் பெருக பாதம் பணிந்தாள்!

காலத்தால் அழியா காவியம் இதுவே,
பாவம் போக்கும் பரிகாரம் இதுவே,
இராமா இராமா என்றே சொன்னால்
செய்த பாவம் விலகிடுமே!

சுக்ரீவன், ஜாம்பவான், அனுமன் அங்கதன்
விபீஷ்ணன், லக்குவன், பரதன், சத்ருக்ணன்
முனிவர் ரிஷிகள் சூழ்ந்திட்டு நிற்க
அன்னை சீதா தேவியுடன், அரியணை அமர்ந்தான்,
ஆட்சி புரிந்தான், நல் ஆட்சி புரிந்தான் ஸ்ரீராமன்!

ஸ்ரீராம ஜெயம் ! ஸ்ரீஅனுமன் ஜெயம் !!


No comments:

Post a Comment