Featured post

The Eleventh Rudra Incarnation of Merciful Lord Siva

Sunday, 14 February 2016

ஸ்ரீ ராம நாம மகிமை



ஸ்ரீ ராம – SRI RAAMA - /sri: ra:ma/
     பகவானின் தனிச் சிறப்பு யாதெனில், அவனியில் எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் ஒரு அவதாரம் எடுத்து, அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டுவதே! அன்னையின் தனிச் சிறப்பு யாதெனில், எப்போதெல்லாம் பகவான் அவதாரம் எடுக்கிறாரோ, அப்போதெல்லாம் தாயும் அவதரித்து இறைவனுக்குத் துணை நிற்கிறார் என்னும் உண்மையே!

 திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமராக அவதரித்தார், ஸ்ரீ மஹாவிஷ்ணு. ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார், சீதா தேவியாக அவதரித்தார். தெய்வமே மனிதனாகப் பிறந்தாலும் இயற்ற வேண்டிய கடமைகள், பாதுகாக்க வேண்டிய தர்மங்கள் , கடைபிடிக்க வேண்டிய அறங்களில் இருந்து பிசகலாகாது என்று வாழ்ந்து காடியவர் ஸ்ரீராமனான ஸ்ரீ மஹாவிஷ்ணு. 

ஸ்ரீ ராமனை எண்ணி, வணங்கி, பாடி வாழ்வில் இன்பம் அடைந்த பலர் உண்டு. தான் தெய்வப்பிறவி என்றாலும், இறைவழிபாடு இன்றியமையாதது என்று உணர்ந்து, ஸ்ரீமஹாதேவரை வணங்கி, இறைவழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர், ஸ்ரீ ராமர்.

ஸ்ரீ ராம நாமத்திற்கு ஈடான ஒரு மந்திரம் உலகில் இல்லை என்பதை, ஸ்ரீபகவான் பரம்பொருள் சிவபெருமான் வாய் மொழியாகவே உணரலாம்.
ஈஸ்வர உவாச-
“ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஸகஸ்ர நாம தத்துள்யம் ராம நாம வரானனே”


राम रामेति रामेति रमे रामे मनोरमे
              
सहस्रनाम तत्तुल्यं रामनाम वरानने
 
Raama Raame[a-I]ti Raame[a-I]ti Rame Raame Manorame |
                Sahasra-Naama Tat-Tulyam Raama-Naama Vara-[A]anane ||


/ra:ma ra:ma ra:me:thi rame: ra:me: manorame:/

/sahasra na:ma ðaðuljam ra:mana:ma vara:nane:/


   பொருள்:

                ராம என்று ஒருமுறை உச்சரிப்பது ஆயிரம் விஷ்ணு நாமங்கள்             (விஷ்ணு ஸகஸ்ர நாமம்) கூறியதற்குச் சமமாகும்.


“ஸ்ரீராம” என்று மட்டும் சொன்னாலே சொல்லியவர் செய்த அனைத்துப் பாவங்களும், சூழ்ந்திருக்கும் தோசங்களும், தீய எண்ணங்களும் நீங்கிவிடும். இதைத்தான் ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீராம பிரானிடம் வேண்டினார். எவர் ஒருவர் ஸ்ரீ ராம நாமத்தை உச்சரிக்கிறாரோ, அவர்களைப் பாவங்களிலிருந்தும், தோசங்களிலிருந்தும், சாபங்களிலிருந்தும் விடிவிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார், ஸ்ரீஆஞ்சநேயர்.

அனைத்து நாமவளிகளும் ‘ஓம்’ என்ற பிரணவ ஒலியை முன்மொழிந்தே ஆரம்பமாகின்றன. ‘ஓம்’ என்னும் மந்திர உச்சாரத்துள், ‘ஓம்’கார நாதனாக வீற்றிருக்கும் ‘ஓம்காரன் சிவபெருமான்’ தனக்குப் பிரியமாக ‘ஸ்ரீராம’ நாமத்தைத் தன் பெயரோடு சேர்த்துக் கொண்டுள்ளார்.

ஸ்ரீராம பிரான் சிவபெருமானை வணங்கி தன் பெயரோடு ஈஸ்வரன் பெயரும் இணைந்து இவ்வுலகில் ஒலிக்க வேண்டும் என்று கேட்டதன் விழைவாக, ஸ்ரீ ராமேஸ்வரம் என்ற பெயர் உருவாகி, இன்றும் நிலைத்து இருக்கின்றது. இது, ஸ்ரீமத் இராமாயணம் காட்டும் கண்கூடான உண்மை. 

ஸ்ரீராமேஸ்வரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீராமரின் இறைவன், ஸ்ரீராம நாமத்தைத் தன் பெயராக ஏற்று, ஸ்ரீ ராமனின் மனம் நிறைந்த தலைவனாக, “ஸ்ரீராமநாதன்” என்ற பெயர் கொண்டு ஸ்ரீராமனின் வேண்டுதலுக்கிணங்க அருள்கின்றார், சிவபெருமான்.

“ஸ்ரீராமநாதா!” என்றழைத்தால், அங்கு ஸ்ரீராமனின் அருளும், அவர் நாதனான சிவனின் அருளும் கிடைக்கும். ஸ்ரீராமா என்றால், ஸ்ரீஅனுமனும் வருவார், சீதையும் வருவார். சக்தியில்லாமல் சிவன் வருவாரா? இறைவனே வருகையில் அவர் பிள்ளைகளும், அடியார்களும் வராமல் இருக்க முடியுமா? எனவே, ஸ்ரீராமநாதா என்றாலும், ஸ்ரீராமா என்றாலும், இறை அருள் நிச்சயம் உண்டு. 

ஸ்ரீராமன் பஞ்சாட்சரன் ஆனது இங்கே- ஸ்ரீ-ரா-மே-ஸ்-வ-ர்
பஞ்சாட்சரனாக ஸ்ரீராமனோடு இறைவன் இங்கே – ஸ்ரீ-ரா-ம-நா-த்
பஞ்சாட்சரனின் அவதாரம் – 
ஸ்ரீ-அ-நு-மா-ன், ஆ-ஞ்-ச-நே-ய, வா-யு-பு-த்-ர…

ஸ்ரீராம நாமத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு எனில்,

நாராயணனின் ஈராம் எழுத்து – ரா- வும்,
நமசிவாயனின் ஈராம் எழுத்து – ம-வும், சேர்ந்திருக்கும் ஒரு அற்புத மந்திரம் தான் –  “ராம”. 

சிவ விஷ்ணு அபேதத்தின் அடிப்படைத் தத்துவமே இதில் அடங்கியிருக்கிறதென்றும், “ராஎன்ற எழுத்து அஷ்டாக்ஷத்திரத்தின் ஜீவன் என்றும், “என்ற எழுத்தோ பஞ்சாக்ஷரத்தின் ஜீவன் என்றும் காஞ்சி மகா பெரியவர் கூறியுள்ளார்.

     உச்சரிக்கப்படும் ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு சக்தி உண்டு. அதன் காரணமாகத்தான், பிரணவ மந்திரம் முதலான வழிபாட்டு மந்திரங்கள் அனைத்தையும் வணங்குகிறோம். உச்சரிப்பு தவறாகும் போது, அதற்கான பலனும் மாறுபடுகிறது. நாம ஜெபத்தின் உள்நோக்கமும் இதுவே.

உதாரணமாக, ஒலி- சப்தம், ஒளி- வெளிச்சம்.

இதன் காரணமாகத்தான், ஒன்றை முழுதாக, பிழையின்றி கற்றுக்கொள்ள, குருவை நாடுகிறோம். 

ஸ்ரீராம நாமத்தை வால்மீகி மஹரிஷிக்குக் கற்றுத்தந்தவர், தேவரிஷி நாரதர். முதலில் “மரா” என்று தவறாகச் சொன்ன ரத்னாகர் தான் ஸ்ரீமத் இராமாயணத்தை இயற்றிய வால்மீகி மகரிஷி.

 இன்றும் உலக மக்களுக்கு ஸ்ரீராம நாமத்தைக் கற்றுத்தருபவர், ஸ்ரீஆஞ்சநேயர். அவ்வகையில், நம் அனைவருக்கும் குரு, ஸ்ரீஆஞ்சநேயர் தான். 

ஸ்ரீராம பாணத்தின் முன் எந்த அஸ்திரமும் தோல்வியடையும். ஸ்ரீராமருக்கும் ஸ்ரீஆஞ்சநேயருக்கும் இடையே மூண்ட யுத்தத்தில், சக்திவாய்ந்த ராமபாணத்தின் முன் ஸ்ரீ ராம நாமத்தை மட்டுமே கூறி காசிராஜன் யயாதியைக் காத்தவர் ஸ்ரீஅனுமான். யயாதிராஜனின் ராம நாம ஜெபம், அவனை ராம பாணத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் காத்தது.

சமுதாயத்தில் மனிதன் உருவாக்கிய ஏற்றத்தாழ்வுகள் ராம நாமத்திற்கு இல்லை. சமுதாயத்தின் கீழ் வகுப்பினர் என்று ஒதுக்கப்பட்டவர் இல்லத்திலும் ஸ்ரீராம நாமம் வாழ்கின்றது; ராமசாமி என்று பெயர் சூட்டி, ராமா என்றாலும் அது ராம நாம ஜெபமே; அங்கு அனுமன் வருவது தின்னமே!

ஸ்ரீ ராம நாம மகிமையை ஒரு யுகத்தில் சொல்லிவிட முடியுமோ?
ஸ்ரீ ராம நாமம் சொல்லி, உணர்ந்து, மகிழ்ந்து, வாழ்ந்து, பிறரையும் சொல்லச் செய்து வாழச் செய்யுங்கள்!
ஸ்ரீ ராம ஜெயம்!


work cited:
https://balhanuman.wordpress.com/2013/01/01/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5/
http://www.greenmesg.org/mantras_slokas/sri_rama-rama_rameti.php

தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்

No comments:

Post a Comment